புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஹிந்தி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
துறைத் தலைவர் ஜெய சங்கர் பாபு வரவேற்றார். மகாத்மா காந்தி அன்த்தராஷ்ட்ரிய இந்தி விஷ்வாவித்யாலயா கல்வி நிறுவனத்தின் முன்னாள் புல முதன்மையர் பேராசிரியர் பாலிவால் கலந்து கொண்டு இந்தி மொழிநாள் கொண்டாட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் வரலாறு குறித்துப் பேசினார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் துறை இயக்குநர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஹிந்தி நாளை முன்னிட்டு மாணவர்கள், பேராசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார் .
அப்போது அவர் பேசும்போது, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மொழியின் தொன்மையையும், பாராம்பரியத்தையும் உணரும்போது மொழியின் சிறப்பை நம்மால் உணர முடிகிறது. அதோடு, மனிதர்கள் தங்களின் கருத்துகளை, எண்ணங்களை மிக அழகாக இந்திய மொழிகளின் மூலம் உணர்த்த முடியும் என்றார்.
விழாவில், ஹிந்தி மொழி பயின்று வரும் மாணவர்களுக்குப் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், பல்கலைக்கழக புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஹிந்தித் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.