ஆட்டோ ஓட்டுநரை காவலர் தாக்கியதைக் கண்டித்து, புதுச்சேரி நேரு வீதி போக்குவரத்து காவல்நிலையம் எதிரே ஆட்டோ ஓட்டுநர்கள் திங்கள்
கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுவை கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (45), ஆட்டோ ஓட்டுநர். இவர் திங்கள்கிழமை காலை தனது ஆட்டோவை புதிய பேருந்து நிலையம் எதிரே நோ-பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, போக்குவரத்து சீரமைப்புப் பணியை பார்வையிட வந்த கிழக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயராமனின் வாகன ஓட்டுநரான காவலர், ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பலர், புதுவை நேரு வீதியில் உள்ள கிழக்கு போக்குவரத்து காவல் நிலையம் எதிரே திரண்டனர். ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேரு வீதி - ஆம்பூர் சாலை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் வம்சிதரெட்டி, ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதனை ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா எம்எல்ஏ, காவல் கண்காணிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதனை காவல் கண்காணிப்பாளர் ஏற்றுக்கொண்டதின்பேரில், ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.