கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் திங்கள்கிழமை மேற்கொண்ட சாராய ஒழிப்பு வேட்டையில் 1,400 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன் தலைமையில் கல்வராயன்மலை காவல் உதவி ஆய்வாளர் கிள்ளிவளவன், கச்சிராயப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உப்பூர் பகுதியில் திங்கள்கிழமை தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வாரம் பகுதியில் 5 பேரல்களில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலைக் கண்டு பிடித்து அழித்தனர். தலைமறைவான அதே கிராமத்தைச் சேர்ந்த பிச்சன் மகன் சந்திரபாபுவை தேடி வருகின்றனர்.
அதே போல, சேத்தூர் ஓடைப் பகுதியில் 4 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊறலைக் கண்டு பிடித்து அழித்து அதே கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தன் மகன் பழனிசாமியை தேடி வருகின்றனர்.