விழுப்புரம், கடலூர் மாவட்டக் காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான 2 நாள் புத்தாக்கப் பயிற்சி விழுப்புரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
காவல் நிலையங்களில் வரவேற்பாளராக காவலர் ஒருவரை நியமித்து, பொதுமக்களின் புகார்களை முதலில் அணுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வரவேற்பாளர்களுக்கு இரண்டு நாள்கள் புத்தாக்கப் பயிற்சி விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் மண்டபத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 120 பேர் பங்கேற்றனர்.
புத்தாக்கப் பயிற்சியை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தொடக்கி வைத்தார். அவர் பேசியதாவது: காவல் நிலையத்துக்கு அனைத்துத் தரப்பினரும் வருவார்கள். அவர்கள் காவல் நிலையத்துக்குள் வந்தவுடன் முதலில் வரவேற்பாளரைத் தான் அணுக வேண்டும். வரவேற்பாளர்கள் அவர்களை இன்முகத்துடன் அணுகி முறையான தகவல்களை அளிக்க வேண்டும்.வரவேற்பாளர்கள் சாதாரண உடையில், அடையாள அட்டை அணிந்திருந்தாலே போதுமானது. மேசை மீது வரவேற்பாளர் என்று எழுதப்பட்ட பலகை வைத்திருக்க வேண்டும். புகார் அளிக்க வருவோரை தங்களது சகோதர, சகோதரி போல நினைத்து, அவர்களின் புகாரை கேட்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, விழுப்புரம் டிஎஸ்பி சங்கர், விழுப்புரம் பணியிடை பயிற்சி மையம் டிஎஸ்பி சங்கரன், டிஎஸ்பி முத்துமாணிக்கம், பணியிடை பயிற்சி மைய காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்டோர் வரவேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதேபோல, மேலும் 120 பேருக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.