விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் மூலம் புறக்கடைக் கோழி வளர்ப்புக்கு நாட்டுக் கோழிகள் 4,400 பயனாளிகளுக்கு வழங்கப்படவிருக்கின்றன.
இந்த நாட்டுக் கோழிகளைப் பெற தகுதியிடையோர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கால்நடை பராமரிப்புத் துறை, 2018-19ஆம் ஆண்டுக்கான கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக புறக்கடைக் கோழி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், தலா 200 பயனாளிகள் வீதம், 4,400 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தில், ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 50 நாட்டுக் கோழிகள் வழங்கப்படும்.
பயனாளிகள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழ்மையான பெண்களாக இருப்பதுடன், விண்ணப்பத்தில் வறுமைக்கோடு எண்ணை குறிப்பிட வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
மாற்றுத் திறனாளி, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவு இல்லாதவர்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
இதில், 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பில் இருந்து தேர்வு செய்யப்படுவர்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனையை தொடர்பு கொண்டு அதற்கான விண்ணப்பத்தை பெற்று அளித்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.