திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் தினம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பரிசளிப்பு ஆகியவை முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டன. விதை விருட்சம் அறக்கட்டளை, வானவில் கல்வி அறக்கட்டளை, கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் ஆகியவை இணைந்து விழாவை நடத்தின.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சு.ஜனசக்தி ஞானவேல் முன்னிலை வகித்தார். வானவில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வே.ஜெயக்குமார் வரவேற்றார்.
விழாவில் திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் லட்சுமணன் காந்தி, நெகிழிக் கழிவின் நச்சுத்தன்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.
கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்க மாவட்டத் தலைவர் பொன்.முருகன், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளுடன், சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
விதை விருட்சம் அறக்கட்டளைத் தலைவர் அ.சிதம்பரநாதன், செயலர்கள் சே.சரவணன், எஸ்.ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், நரசிம்மன் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டிப் பேசினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர். பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.கந்தன் நன்றி கூறினார்.