தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 12-ஆவது மாவட்ட மாநாடு, வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் திங்கள் கிழமை தொடங்கியது.
மாநாட்டையொட்டி பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் பகுதியிலிருந்து விவசாயிகள் சங்கத்தினர் பேரணி தொடங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இதையடுத்து, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை அம்பேத்கர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் தென்பெண்ணை கலைக்குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. வரவேற்புக்குழு தலைவர் எம்.அய்.சகாபுதீன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.சேகர் வரவேற்றார். விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப் பேரவைக் குழு துணைத்தலைவருமான சிவகங்கை எஸ்.குணசேகரன், மாநில துணைச் செயலாளர் திருவாரூர் பி.எஸ்.மாசிலாமணி, புதுச்சேரி மாநில விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் து.கீதநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கலியமூர்த்தி, தலைவர் கே.இராமசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஏ.கோவிந்தராஜ், எம்.கலியபெருமாள், ஆ.வளர்மதி, எஸ்.இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். செவ்வாய்க்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாவட்டம் முழுவதும், இடைக்குழு மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட
பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.