விழுப்புரம் மாவட்டம் உதயமான 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவையொட்டி பள்ளி மாணவர்களை வரலாற்று சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி கூறினார்.
விழுப்புரத்தில் பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் 51-ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழா , விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் கடந்த நவ.14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வாசகர் வட்ட துணைத் தலைவர் எழுத்தாளர்
கோ.செங்குட்டுவன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டம் தனியாக தொடங்கப்பட்டு 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில், மாவட்டம் குறித்த வரலாற்றுச் சிறப்புகளை மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளும் விதமாக கல்வித் துறை சார்பில் சுற்றுலாவுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன் வரவேற்றார். பொருளாளர் கோ.பாபு முன்னிலை வகித்தார். விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல், ரோட்டரி சங்கத் தலைவர்
சே.புதுராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாசகர் வட்டம் சார்பில் தேசிய நூலக வார விழா தொடர்பாக மாவட்ட அளவில், வட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி பரிசுகள் வழங்கினார். அப்போது, கல்வித் துறை சார்பில் மாணவர்களை வரலாற்றுச் சுற்றுலா அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅவர் உறுதியளித்தார்.
பாரதி சிந்தனைப் புலம் ராமமூர்த்தி, திருக்கோவிலூர் வாசகர் வட்டத் தலைவர் சிங்கார உதியன், வாசகர் வட்டச் செயலாளர்
ம.இளஞ்செழியன், இணைச் செயலர் இரா.அரிதாசு, பத்மநாபன், மாணவர் அமைப்பாளர் அ.தினகரன், கவிஞர் சீ.விக்கிரமன், நூலகர்கள், வாசகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.