விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி சரோஜினி தேவி மருத்துவமுகாமைத் தொடக்கி வைத்து பேசியதாவது: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை அனைவரும் உணர வேண்டும். நோய் வருவதற்கு முன்பே அல்லது ஆரம்ப நிலையிலே அதனை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். அதற்கு இதுபோன்ற மருத்துவ முகாம்கள் பயனுள்ளதாக அமையும். இதனை, நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்குரைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூத்த மருத்துவர் பத்ரிநாத் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனைகளை செய்தனர்.
இந்த முகாமின் ஒரு பகுதியாக, டெங்கு,பன்றிக் காய்ச்சல் போன்ற காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் சித்த மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், ஜமுனா, உமாமகேஸ்வரி, ஜெயமங்கலம், காஞ்சனா, உத்தமராஜ், கயல்விழி, பிரியா, கவிதா, மும்தாஜ், பாரதி மற்றும் மூத்த வழக்குரைஞர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.