விழுப்புரம் பகுதியில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3,395 லிட்டர் எரிசாராயத்தை நீதிமன்ற அனுமதியுடன் போலீஸார் புதன்கிழமை அழித்தனர்.
விழுப்புரம் மது விலக்கு போலீஸார் விழுப்புரம் பகுதியில் அண்மையில் இரு வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 97 கேன்களில் இருந்த 3,395 லிட்டர் எரிசாராயத்தை அழிக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து, புதன்கிழமை விழுப்புரம் அருகேயுள்ள பிடாகம் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் அந்த சாராயக் கேன்களை வாகனத்தில் கொண்டு சென்றனர்.
அங்கு விழுப்புரம் மது விலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி கேன்களில் இருந்த எரிசாராயத்தை கீழே ஊற்றி போலீஸார் அழித்தனர்.
அழிக்கப்பட்ட எரி சாராயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது.