ஐயப்பப் பக்தர்களைத் தாக்கி, வழிபாட்டு உரிமையைப் பறித்து வரும் கேரள அரசைக் கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழுப்புரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஐயப்ப சேவா சங்கத் தலைவர் டி.பியாரிலால் தலைமை வகித்தார்.
ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்த குருசாமி குப்புசாமி, சபரிமலை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர் விநாயகம், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் எஸ்.விக்கிரமன், அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரத ஐயப்ப சேவா சங்கம் டி.கே.முரளிதரன், சபரிமலை பாதுகாப்பு இயக்கம் வை.அருள், பாஜக மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன், சுகுமார், பாலசுப்ரமணியன், தனசேகரன், ராஜுலு, ஜெயக்குமார், சக்திவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
புண்ணிய பூமியான சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை கைது செய்து, வழிபாட்டு உரிமையைப் பறித்து வரும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்தும், சபரிமலைக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பில்லாத அநாகரிகமான பெண்களை பக்தர்கள் போர்வையில் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் அந்த மாநில முதல்வரைக் கண்டித்தும், சபரிமலையில் அடிப்படை வசதிகளைப் பறித்து, ஐயப்ப சரண கோஷங்களுக்கு தடை உத்தரவு
போட்டு, பக்தர்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்தும், ஐயப்பப் பக்தர்களுக்காக போராடும் அப்பாவி மக்களையும், இந்து இயக்கத் தலைவர்களையும் சட்டவிரோதமாகக் கைது செய்வதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.