விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கடந்த இரு தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 4 ஆயிரத்து 830 லிட்டர் எரிசாராயத்தை திண்டிவனம் மதுவிலக்கு போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் கடந்த இரு தினங்களாக லாரி ஒன்று தார் பாய் மூடிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் மயிலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் லாரியை சோதனை செய்தபோது, அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 138 கேன்களில் மொத்தம் 4 ஆயிரத்து 830 லிட்டர் எரி சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான திண்டிவனம் மதுவிலக்கு போலீஸார் சாராய கேன்களுடன் அந்த லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, அந்த லாரியின் உரிமையாளர் யார், எங்கிருந்து எரிசாராயம் கடத்தி வரப்பட்டது, லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானவர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.