லஞ்சம் பெற்றதாக கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
வாகன தகுதிச் சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்த பாபு, அவரது உதவியாளர் செந்தில்குமார் ஆகியோரை, கடந்த 11ஆம் தேதி விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.35 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பாபு, செந்தில்குமார் ஆகியோர் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஜாமீன் கோரி, பாபு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பிரியா, பாபுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.