சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.இ.எஸ், என்.எப்.ஐ.ஆர். ஐஎன்டியுசி தொழில் சங்கத்தினர் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ரயில்வே பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் கே.முருகன் தலைமை வகித்தார். பொருளாளர் எம்.மதியழகன் முன்னிலை வகித்தார். கோட்டத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம், செயலாளர் ராமசந்திரய்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தொழில் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.26
ஆயிரம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம்பள நிர்ணயத்தை 3.7 மடங்காக உயர்த்திட வேண்டும், ரயில்வே துறையில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை ஒழிக்க வேண்டும், வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை சரண்டர் செய்வதை கைவிட்டு, புதிய ஆள்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டன.