விழுப்புரம் மாவட்டத்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் தமாகா சார்பில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய மாவட்டத் தலைவர் வி.தசரதன் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் கோபால் வரவேற்றார். மாநில இணை செயலாளர் ஜெயமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் சதீஷ்பாபு, நகர தலைவர் ஹரிபாபு, மாவட்ட செயலாளர் ஏ.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் பேசியதாவது: விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவராக பணியாற்றி வந்த ஏ.டி.ராஜேந்திரன், குடும்ப சூழல் காரணமாக தலைவர் மற்றும் கட்சி பணியிலிருந்து விலகிக்கொள்வதாக, கட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தலைவர் ஜி.கே.வாசன் உத்தரவின் பேரில், மத்திய மாவட்டத் தலைவராக உள்ள வி.தசரதன், வடக்கு மாவட்டத் தலைவராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைவர் ஜி.கே.வாசன் கடலூர் மாவட்டத்துக்கு அக்.7-ஆம் தேதி வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். விழுப்புரம் மாவட்டத்துக்கு அக். 15-ஆம் தேதிக்கு மேல் வருகை தந்து, சட்டப் பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள், கட்சியினரை சந்தித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும். கட்சியினர், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ளத் தயாராக வேண்டும் என்றார்.
மாநில பொதுக் குழு உறுப்பினர் சங்கர், திண்டிவனம் நகர தலைவர் சீனுவாசன், வட்டாரத் தலைவர் துரைசாமி, செஞ்சி நகர தலைவர் சரவணன், மாவட்ட இளைஞரணி செயலர் கிரிநாராயணன், தலைவர் அந்தோணிபால்ராஜ், வர்த்தர் அணித் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட, மத்திய, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.