லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்: 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகே போர்வெல் லாரியின் ஓட்டுநரைத் தாக்கி, லாரியின் கண்ணாடியை உடைத்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்த பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் கணேசன் (29). இவர் போர்வெல் லாரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரது வீட்டில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து விட்டு வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் லாரியை ஓட்டிக் கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார் .
தென்கீரனூர் தேரடி சாலை அருகே வரும்போது, சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஓலி எழுப்பினாராம். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் குணா, குழந்தைவேலு மகன் விவேக்ராஜ் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து லாரியை வழிமறித்தனர்.
பின்னர், லாரி ஓட்டுநரிடம் எனது அண்ணன் மகன் பிறந்த நாள் விழா கேக் வெட்டிக் கொண்டாடும் போது, எப்படி அதிக ஒலி எழுப்பலாம் என தட்டிக் கேட்டனராம்.
இவர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த சின்னசாமி மகன் வினோத், சேகர் மகன் சரண்ராஜ், குமாரசாமி மகன்கள் தமிழ்ச்செல்வன், விக்கி, ஆறுமுகம் மகன் அஜித், கோவிந்தசாமி மகன் ரஜினி உள்ளிட்டோரும் சேர்ந்து கொண்டு லாரி ஓட்டுநர் கணேசனிடம் தகராறு செய்து திட்டித், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
பின்னர், கல்லால் லாரியின் கண்ணாடியை உடைத்தனராம்.
இதில் காயமடைந்த கணேசன் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விவேக்ராஜ் (23), வினோத் (30), சரண்ராஜ் (30), தமிழ்செல்வன் (23) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள நால்வரை தேடி வருகின்றனர்.