அரசு ஓய்வூதியர்களுக்கான கூடுதல் அடிப்படை ஊதிய விகிதாசாரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பணி நிறைவு பெற்ற அனைத்து நிலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு பணி நிறைவுபெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நல்லாசிரியர் தே.வே.சஞ்சீவிராயன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் சி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் நா.விஜயரங்கம், ஆத்தூர் சீனுவாசன், பூத்தமேடு ஜி.பெருமாள், ஜி.அண்ணாமலை ஆகியோர் சங்க கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசுப் பணியாளர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவப் படி ரூ.500 ஆகவும், பொங்கல் பண்டிகை கருணைத் தொகை ரூ.2ஆயிரம் ஆகவும், பண்டிகை முன்பணம் ரூ.5ஆயிரமும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு வயது வரம்பு அடிப்படையில், அரசாணை 42-ன்படி ஊதிய சதவீதத்தை மாற்றியமைத்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைமை நிலையச் செயலாளர் எஸ்.குப்புசாமி நன்றி கூறினார்.