விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவை அமைதியான முறையில் நடத்தும் வகையில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் புதன்கிழமை மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) 3,227 வாக்குப் பதிவு மையங்களில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இவற்றில், பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கும், 5-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பும், மற்ற
வாக்குப் பதிவு மையங்களுக்கு காவல் துறையினரின் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் ராணுவ வீரர்களும், ஓய்வு பெற்ற காவல் துறையினரும், ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, பதற்றமான வாக்குச் சாவடிகள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பொதுமக்கள் அமைதியாக வாக்களிக்கத் தேவையான
நடவடிக்கைகளை மாவட்டக் காவல் துறை செய்துள்ளது.
இந்த நிலையில், வாக்குச் சாவடிகள் பாதுகாப்புப் பணியில் புதன்கிழமை முதலே துணை ராணுவத்தினரும், போலீஸார் உள்ளிட்டோரும் ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்கிழமை மாலை மாவட்டக்
காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
குறிப்பாக, விழுப்புரம் அருகே கோலியனூர், வளவனூர், அர்பிசம்பாளையம், கண்டமங்கலம் அருகே பாக்கம், விக்கிரவாண்டி அருகே துறவி, பனையபுரம், திருவக்கரை, பிள்ளையார்குப்பம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டு, காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.