விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகளில் மக்களவைத் தேர்தலின்போது வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியது. அங்கு, 100 வாக்குகள் பதியப்பட்ட நிலையில், இயந்திரத்தை சீரமைக்க முயன்றும் சரிசெய்ய முடியாததால், மாற்று இயந்திரத்தை வைத்து வாக்குப் பதிவை தொடங்கினர்.
இதேபோல, பேரங்கியூர், கிராமம், தியாகதுருகம் அருகே சிறுநாகலூர், தொட்டியம், அனைக்கரைகொட்டாளம் உள்ளிட்ட இடங்களில் மின்னணு சாதனம் பழுதானதால், சீர் செய்து பின்பு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால், அரை மணி நேரம் வரை வாக்குப் பதிவு பாதித்தது. இதேபோல, செஞ்சி தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலும் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக சுமார் அரை மணி நேரம் வரை வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சின்னசேலத்தில் வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட தகராறில் தேமுதிக நகரச் செயலர் செல்வம் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருநாவலூர் வாக்குச் சாவடி அலுவலர், முதியவர்களிடம் குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்களிக்கச் சொன்னதாக எழுந்த புகாரின்பேரில், அவருக்குப் பதிலாக மாற்று அலுவலர் நியமிக்கப்பட்டார். இதேபோல், செஞ்சி பகுதியிலும் இரண்டு அலுவலர்கள் புகார்களின்பேரில் மாற்றப்பட்டனர்.