திண்டிவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வாக்காளர்கள் வேதனை தெரிவித்தனர்.
திண்டிவனம் நகராட்சிக்கு உள்பட்ட 6, 32, 33-ஆவது வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்கள், அங்குள்ள வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை வாக்களிக்கச் சென்றனர். அப்போது, அந்த வார்டுகளில் 100-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், அவர்கள் வாக்குச் சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாமக வேட்பாளர் எஸ்.வடிவேல்ராவணன், விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று வாக்குச் சாவடி அலுவலர்களிடம் விசாரித்தனர். அப்போது, வாக்காளர் இறுதிப் பட்டியலில் அவர்களது பெயர்கள் இல்லை என்பதை அலுவலர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனால், ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் கூறியதாவது: வாக்குச் சாவடி எண் 88, 90, 91-இல் உள்ள 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளோம். வாக்காளர் அடையாள அட்டையும் வைத்துள்ளோம். எனினும், எங்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் துறையினர் அலட்சியமாக வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, உண்மையான வாக்காளர்கள் ஒருவரையும் நீக்கவில்லை. வெளியூர் சென்றவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மட்டுமே நீக்கப்படுகின்றனர். இருந்தபோதிலும், புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.