விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 158 அங்கன்வாடி பணியாளர்கள், 182 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாளில் அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, மாவட்ட சமூக நலத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், 158 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு, அழைப்புக் கடிதம் அனுப்பி வைத்து நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில், 1,750 பேர் கலந்துகொண்டனர். 10-ஆம் வகுப்பு தகுதியிலான இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வில் பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதில், சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வும் நடைபெற்றது.
தொடர்ந்து, 2-ஆம் நாளில் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்தப் பணிக்கு, குறைந்தபட்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது என்பதால், 182 உதவியாளர் பணியிடங்களுக்கு 1,110 பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் நேர்முகத் தேர்வில் 1,000 பேர்கலந்துகொண்டனர். இவர்களுக்கும், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் நேர்முகத் தேர்வை நடத்தினர். இதில், தேர்வு செய்யப்படுவோர் பெயர் பட்டியல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும் என மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா தெரிவித்தார்.