விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டியை அடுத்த மேலக் கொந்தை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜவேல் (32), கார் ஓட்டுநர். வியாழக்கிழமை பிற்பகல் ராஜவேலின் குடும்பத்தார் காணும் பொங்கலுக்காக வெளியே சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டும் தங்களது கூரை வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, திடீரென அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய ராஜவேல் அலறினார்.
வீடு தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். உள்ளே பலத்த தீக்காயத்துடன் இருந்த ராஜவேலுவை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.