திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா, கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 16-ஆம் தேதி இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 18-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
விழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா புறப்பாடு, விசேஷ திருமஞ்சனம், பஜனை, சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீச பெருமாள் கோயிலில் இருந்து தேருக்கு எழுந்தருளினார். பின்னர், கோவிந்தா கோஷம் முழங்க, 9.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேர், நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் போலீஸார் அதிகளவில் ஈடுபட்டனர்.