சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதன் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டியில் வசித்து வருபவர் வி.ஏ.டி.கலிவரதன். சட்டப்பேரவை (பாமக) முன்னாள் உறுப்பினரான இவர், தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
அண்மையில், இவரது கட்செவி அஞ்சலில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் மக்களைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோர் குறித்து, வன்முறையைத் தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் விதமாகவும் பதிவிட்டிருந்தாராம். இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாவட்டத் துணைச் செயலர் சைலோம் எஸ்.வெற்றிவேல், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸார், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதன் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.