மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி சார் - ஆட்சியர் அலுவலகம் முன் தொடங்கிய பேரணியை கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலருமான அ.அனுசுயாதேவி, கள்ளக்குறிச்சி சார் - ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை வகித்து, கொடியசைத்து தொடக்கிவைத்தனர்.
பேரணியில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பூ.தயாளன், தனி வட்டாட்சியர் எஸ்.சையத்காதர், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜி.குமரன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன், காவல் ஆய்வாளர் தங்க.விஜய்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் பெ.தர்மராஜ், சா.மகாலிங்கம், வருவாய் ஆய்வாளர் ராஜா, ஆட்டோ சங்கத் தலைவர் செல்வம் மற்றும் ஆட்டோக்களுடன் ஓட்டுநர்கள் பலர் பங்கேற்றனர்.
சார் - ஆட்சியர் அலுவலகம் முன் தொடங்கிய ஆட்டோ பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. ஆட்டோக்களில் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.