ராகுல் காந்தி பிரதமர் ஆனதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று, மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி கூறினார்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை இரவு திமுக கூட்டணி விசிக வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி, 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்தை செலுத்தவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மக்களை வெயிலில் காக்க வைத்து அவதிப்படச் செய்ததால் 150 பேர் வரை இறந்தனர்.
பிரதமர் மோடி வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதில் ரூ.2,500 கோடி விமான பயணத்துக்கு செலவாகியுள்ளது.
நீட் தேர்வு கொண்டு வந்ததால், மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதனால், ராகுல் காந்தி பிரதமர் ஆனதும், முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான். விவசாயம், கல்விக் கடன் தள்ளுபடியாகும் என்றார்.
உடன் வேட்பாளர் து.ரவிக்குமார், முன்னாள் திமுக அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சீனுவாசகுமார், நகரத் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலர் தயானந்தம், மதிமுக பாபுகோவிந்தராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணியை ஆதரித்து கள்ளக்குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு விலை தற்போது இரு மடங்காக அதிகரித்துவிட்டது.
மத்தியில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்ததும் பரிசீலிக்கப்பட்டு சரியான விலை நிர்ணயிக்கப்படும். அதனால் கௌதமசிகாமணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து சனிக்கிழமை இரவு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது.
நாட்டை பாதுக்காக்க வேண்டிய ராணுவ வீரர்களுக்கே தகுந்த பாதுகாப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது.
இந்த நிலையில், பாஜக ஆட்சியில் ஒரு புதிய இந்தியா பிறந்துள்ளதாக, நரேந்திர மோடி பெருமிதம் கொள்கிறார்.
அவருக்கு ஆதரவாக, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது அதிமுகவுக்கு எதிராக மக்கள் அலை வீசுகிறது என்றார்.