நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயல், இசை, நாடகம் மற்றும் கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படவே இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு சேர்த்து தற்போது மொத்தமாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயல் பிரிவில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருதும், இசைப்பிரிவில் எஸ்.ஜானகி, சரோஜா, லலிதா, டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் வழங்கப்பபட்டுள்ளது.
அதேபோல் வைஜெயந்தி மாலா பாலி, வி.பி.தனஞ்ஜெயன், சி.வி.சந்திரசேகருக்கு பால சரஸ்வதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்களில் விஜய் சேதுபதி, பிரபு தேவா, விஜய் ஆண்டனி, சசிகுமார், நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், சூரி, நாட்டுப்புற பாடகர்கள் பரவை முனியம்மா, வேல்முருகன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.