பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு (82) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.
கடந்த 1965-இல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் சினிமாவில் சாது மிரண்டால் , அதே கண்கள் , எங்க மாமா, சோப்பு சீப்பு கண்ணாடி, வா ராஜா வா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சிம்லா ஸ்பெஷல், கற்பூரம், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, சிவப்புச் சூரியன், பொண்ணு மாப்பிள்ளை, காசேதான் கடவுளடா, உரிமைக்குரல், ஒரு கைதியின் டைரி, உயர்ந்த மனிதன், கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக 600-க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் டைப்பிஸ்ட் கோபு நடித்துள்ளார். தனது கடைசி காலத்தில் ராயப்பேட்டையில் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார் கோபு. இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள்.
இந்நிலையில் டைப்பிஸ் கோபுவின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:
பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகருமான டைப்பிஸ் கோபு உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அனைவரிடமும் அன்பாபகப் பழகக்கூடியவரும் திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவருமான டைப்பிஸ்ட் கோபுவின் மறைவு தமிழ்த் திரையுலகுக்கு ஒரு பேரிழப்பாகும். டைப்பிஸ்ட் கோபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.