ஹைதராபாத்: அக்டோபர் 15-ல் கண்டிப்பாக ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்கபப்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தர்மாபாத் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் உள்ள பாப்லி ஆற்றின் மீது மகாராஷ்ட்ரா அரசு அணைகட்ட முடிவு செய்தது. அதை எதிர்த்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் இணைந்து 14 பேர் தர்ணா மற்றும் பாதயாத்திரை மேற்கொண்டனர். அதற்காக ஆந்திர முதல்வர் மற்றும் 14 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
அதன்பின் எவ்வித நடவடிக்கையும் மகாராஷ்ட்ர அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் நேரடியாக மகாராஷ்டாராவில் உள்ள தர்மாபாத் நீதிமன்றம் வியாழக்கிழமை மாலை ஆந்திர முதல்வர் மற்றும் 14 பேர் மீது பிணையில்லா வாரண்ட் வெளியிட்டுள்ளது.
வரும், 21-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட மற்ற 14 பேரும் தர்மாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தி வியாழக்கிழமை மாலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்க திருமலை ஏழுமலையான் கோயிலுக்குள் ஆந்திர முதல்வர் இருக்கும் போது அவருக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு கைது வாரண்ட்டுக்கான நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று தர்மாபாத் நீதிமன்றத்தில் ஆஜரான அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதேசமயம் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு, தலா 5 ஆயிரம் அபராதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 14 பேரும் வரும் 15-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.