புது தில்லி: அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு மீது இளம்பெண் ஒருவர் கூறியுள்ள பலாத்காரப் புகாரில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அருணாச்சல் முதல்வராக இருப்பவர் பெமா காண்டு. இவர் மீது இளம்பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் கற்பழிப்பு புகார் ஒன்றை மனுவாகத் தாக்கல் செய்துள்ளார். மனுவில் அந்தப் பெண், கடந்த 2008-ஆம் ஆண்டு அவருக்கு 15 வயதாக இருக்கும் போது, அருணாச்சல பிரதேசத்தில் பொதுசேவை மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அப்போது அறிமுகமான ஒருவர் அந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி சிலரை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
அங்கு சென்ற போது அவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து அங்கிருந்த மூவர் உட்பட நான்கு பேர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்பிப்பிட்டுளார். அங்கிருந்த மூவரில் அருணாச்சல் முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர் என்று அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகாரை ஏற்பதற்கு மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் காவல்துறை மறுத்த காரணத்தாலேயே தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா மற்றும் நீதிபதி சஞ்சய் கண்ணா அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டது. அப்போது 2008-இல் நடந்த அந்த சம்பவம் தொடர்பான மனுவை இப்போது விசாரிக்க மறுத்த நீதிமன்றமானது, அந்தப் பெண்ணை, இப்பிரச்னை குறித்து அருணாச்சல் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும், பாதுகாப்புக்கு போலீசாரை அணுகுமாறும் அறிவுறுத்தியுள்ள னர்.
இதுதொடர்பாக அந்த பெண் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய மகளிர் ஆணையத்திடம் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.