‘உன்னைக் கனவிலும் நனவிலும் நினைத்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் காஞ்சீபுரத்துக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் நான்கு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகள், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என இரண்டெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டுள்ளன.
தனதனந் தத்தத் தத்தன தத்தந்
தனதனந் தத்தத் தத்தன தத்தந்
தனதனந் தத்தத் தத்தன தத்தந் தனதான
புரைபடுஞ் செற்றைக் குற்றம னத்தன்
தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலுங்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
படிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனோ
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் றொருநேமிக்
குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்
கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் குடியேறத்
தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் பகையோடத்
தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்
தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்
சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் பெருமாளே.