‘உனது திருவடிகளைத் தந்து ஆண்டுகொள்ள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவேங்கடத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என ஐந்தெழுத்துகளும்; இரண்டு-மூன்று, நான்கு-ஐந்து, எட்டு-ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன தனதான
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே
எனதாந்தன தானவை போயற
மலமாங்கடு மோகவி காரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.