ஐபிஎல் 2019 சீசன் போட்டி முழுவதும் நியூஸிலாந்து அணி வீரர்கள் பங்கேற்று ஆட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை நியூஸிலாந்து கிரிக்கெட் பொது மேலாளர் ஜேம்ஸ் வியர் வெளியிட்டார். ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் நடைபெற்ற கலந்தாலோசனைக்கு பின் அவர் இதைத் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் விளையாடி அனுபவம் பெற எங்கள் வீரர்களுக்கு இது உதவியாக இருக்கும். ஐபிஎல் போட்டியில் விளையாடுவதின் மூலம் சிறந்த அனுபவத்தை அவர்கள் பெறலாம். கடந்த சீசனில் நியூஸி.யின் 11 வீரர்கள் இடம் பெற்று ஆடினர்.
கேப்டன் கேன் வில்லியம்ஸன், டிம் செளதி, ஆடம் மைன், டிரென்ட் பௌல்ட், மெக்ளேனேகன் ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
மேலும் வரும் ஜனவரி மாதம் நியூஸிலாந்தில் 5 ஒரு நாள் ஆட்டம், 3 டி 20 ஆட்டங்களில் இந்தியா பங்கேற்று விளையாடும். முதல் ஒரு நாள் ஆட்டம் ஜனவரி 23-இல் நேப்பியரில் நடக்கிறது. இந்திய பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு ஆட்ட நேரங்களை அமைக்க ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.
ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் சில நாள்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதனால் இங்கிலாந்து மற்றும் ஆஸி. கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் சீசன் முழுவதும் ஆட அனுமதிக்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.