மகளிர் டி20 உலகக்கோப்பை: முதலில் பேட் செய்த இந்திய அணி 145 ரன்கள் குவிப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது.
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

மகளிர் டி20 உலகக்கோப்பையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது. 

மகளிர் டி20 உலகக்கோப்பையில், இந்திய மகளிர் அணி இன்று (வியாழக்கிழமை) அயர்லாந்தை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தானா களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நல்ல தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மந்தானா 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக விளையாடினார். ஆனால், அவர் 18 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் டெலானி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத், வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஹேமலதா ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்கு ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிதாலி ராஜ் அரைசதம் அடித்தார். அவர் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து 19-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது. 

அயர்லாந்து அணி சார்பில் கார்த் 2 விக்கெட்டுகளையும், ரிச்சார்ட்ஸன், ஓரெய்லி மற்றும் டெலானி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

இதைத்தொடர்ந்து, அயர்லாந்து அணி தற்போது 146 ரன்கள் என்ற இலக்கை விரட்டி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com