4 அடி 11 அங்குலம் உயரம் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனையும் சுழற்பந்துவீச்சாளருமான பூணம் யாதவ் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
2018-ல் டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் 22 இன்னிங்ஸில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலம் ஆடவர், மகளிர் என இருவகை டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்கிற சாதனை படைத்துள்ளார். 2016-ல் பூம்ராவும் இந்த வருடம் பாகிஸ்தானின் ஷதாப் கானும் 28 விக்கெட்டுகள் எடுத்ததே டி20 சாதனையாக இருந்தது. இதனை 27 வயது பூணம் யாதவ் முறியடித்துள்ளார்.
இந்தளவுக்குச் சாதனை படைத்தாலும் இவர் இந்திய ரசிகர்களிடையே அவ்வளவாகப் பிரபலம் ஆகாதவர். மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் ஆகிய இந்திய வீராங்கனைகளை ட்விட்டரில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். ஆனால் பூணம் யாதவை இதுவரை 200 பேர் கூட பின்தொடரவில்லை. இந்தச் சாதனை குறித்த செய்திகள் வெளியானபிறகு அவர் சமூகவலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.