இலங்கைக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி தொடரை 4-0 என கைப்பற்றியது.
5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவே 3 ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இரண்டாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இதன் இறுதி மற்றும் 5-ஆவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை கட்டுநாயகே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 156 ரன்களை குவித்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 5 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். ஜெமியா ரோட்ரிக்ஸ் 46 ரன்களை எடுத்தார். இலங்கை தரப்பில் சசிகலா, பிரியதர்ஷினி தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 105 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அனுஷ்கா சஞ்சீவனி 29, சசிகலா, ஊஷடி ரணசிங்கே 22 ரன்களை எடுத்தனர். இந்திய தரப்பில் பூனம் யாதவ் 3, தீப்தி, ராதா யாதவ் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.