இந்தூரில் நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் முதலில் விளையாடிய செளராஷ்டிர அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய புஜாரா 61 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார். இதையடுத்து டி20 போட்டியில் சதமடித்த முதல் செளராஷ்டிர வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தினார்.
அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய இந்த டி20 சதம் குறித்தும் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாகது குறித்தும் ஒரு பேட்டியில் புஜாரா கூறியதாவது:
கடந்த இரு வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் என்னைத் தேர்வு செய்யவில்லை. ஒருநாள் அல்லது டி20 ஆட்டங்களிலும் என்னால் பங்களிக்கமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளதால்தான் என் பெயரை ஏலத்துக்கு அளிக்கிறேன். இப்போது டி20 சதம் அடித்தபிறகு, இதுபோல தொடர்ந்து விளையாடினால் என்னை ஐபிஎல் அணிகள் கவனிக்கும். அப்போதும் ஐபிஎல்-லில் என்னைத் தேர்வு செய்யாவிட்டால் நான் வழக்கம்போல கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவேன். என்னைப் பற்றிய மற்றவருடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்