இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஷம்மி சிவா.
அண்மைக் காலமாக கடும் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறது இலங்கை கிரிக்கெட் வட்டாரம். ஊழல் முறைகேடு புகார்களால் ஐசிசி விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மோசமான வாரியம் என ஐசிசி வர்ணித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் வியாழக்கிழமை கொழும்புவில் நடைபெற்றது.
ஷம்மி சிவா வெற்றி: முன்னாள் தலைவர் திலங்கா சுமதிபாலாவின் ஆதரவாளரான ஷம்மி சிவா புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எதிராக போட்டியிட்ட ஜெயந்தா தர்மதேசா தோல்வியுற்றார். இவர் முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கவினன் ஆதரவாளர் ஆவார்.
அர்ஜுன ரணதுங்க தோல்வி: 1996-இல் உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி கேப்டன் ரணதுங்க துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இலங்கை வாரியத்தின் நிர்வாகத்தை தூய்மைப்படுத்தப் போவதாக கூறி போட்டியிட்ட அவரது தரப்பினர் தோல்வியைத் தழுவினர்.