இதுதான் கேஎல் ராகுலுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு.
பிருத்வி ஷா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதால் இந்த டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்டுகள் விளையாடியுள்ளார் கேஎல் ராகுல். இன்று தொடங்கியுள்ள சிட்னி டெஸ்டில் அவர் தேர்வானதற்கு கோலி மீது அதிக விமரிசனங்கள் வைக்கப்படுகின்றன.
அதற்கேற்றாற்போல் இன்றும் மோசமாகவே விளையாடினார் ராகுல். 6 பந்துகளையும் சிரமத்துடன் எதிர்கொண்டு 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பிருத்வி ஷா காயத்திலிருந்து மீண்டு வரும்போது அவரும் மயங்க் அகர்வாலும்தான் இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. மூன்றாவது தொடக்க வீரராக ஷுப்மன் கில் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் தேர்வாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முரளி விஜய் போல ராகுலும் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து சிறிது காலத்துக்கு நீக்கப்படலாம் என்கிற நிலையே தற்போது உள்ளது.
இதனால்தான் என்னவோ, தனக்கு மீதமுள்ள கடைசி வாய்ப்பையாவது சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அவசரத்தில் உள்ளார் ராகுல். இதனால் இன்று ஆட்டமிழந்தவுடன் வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்துக் காலத்தைக் கழிக்காமல் உடனடியாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ராகுல் நினைத்தவாறு இந்திய அணி 2-வது இன்னிங்ஸ் விளையாடி அதில் அவர் அதிக ரன்கள் குவிக்கும்போது, அணியிலிருந்து நீக்கப்படும் அபாயத்தை அவர் எதிர்கொள்ளாமல் இருக்க வாய்ப்புண்டு.