ஐபிஎல் 2019 ஒரு பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
பந்தை சேதப்படுத்திய புகாரால் விதிக்கப்பட்ட ஓராண்டு தடைக்காலம் முடிந்த நிலையில் ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளதால், அந்த அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது. கடந்த மாதம் வங்கதேச ப்ரீமியர் லீக் போட்டியில் பங்கேற்ற ஸ்மித் முழங்கையில் காயமடைந்ததால் விலக நேர்ந்தது. உலகக் கோப்பைக்கான ஆஸி. அணியில் இடம் பெற ஸ்மித்துக்கு ஐபிஎல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
ரஹானே, ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லருடன் ராஜஸ்தான் பேட்டிங் பலமாக உள்ளது.
அதே நேரத்தில் ஜெயதேவ் உனதிகட், வருண் ஆரோன், தவல் குல்கர்னி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐஷ் சோதி பந்துவீச்சில் பலம் சேர்ப்பர். இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஏப்ரல் 25-இக்கு பின் ஐபிஎல் தொடரில் இடம் பெற மாட்டார்கள்.
பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில், கேஎல்.ராகுல், சாம் கர்ரன், நிக்கோலஸ் பூரன், மயங்க் அகர்வால் ஆகியோர் பேட்டிங்கிலும், அஸ்வின், ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஆன்ட்ரு டை, முஜிப்புர் ரஹ்மான், டேவிட் மில்லர் ஆகியோர் பந்துவீச்சிலும் வலு சேர்க்கின்றனர்.
பஞ்சாப் அணியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் பேட்டிங், பந்துவீச்சில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டம்: இடம்: சவாய்மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்.
நேரம்: இரவு 8.00.