சென்னை: என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்கப் பொய்யானவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவவு கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் கூறியிருந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்கப் பொய்யானவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்கப் பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை.
அந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால் சம்பந்தப்பட்டவர்கள் தாராளமாக என் மீது வழக்குத் தொடரலாம். நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
கடந்த ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களுடனும், ஆழ்ந்த அறிவுள்ளோரிடமும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தேன். தகுந்த ஆதாரங்களைத் தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.
இனி யாரும் நான் நல்லவனா கெட்டவனா என்று கூற வேண்டியதில்லை. நீதிமன்றம் கூறட்டும். நீதிக்குத் தலைவணங்குகிறேன். நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.