விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்' படமும் தீபாவளி பாய்ச்சலுக்கு ரெடி. "நம்பியார்' படத்தை இயக்கிய கணேஷா இந்த படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனியிடம் ஒரு வழக்கை விசாரிக்கிற நிலை வருகிறது. அது சுற்றி சுற்றி அவர் குடும்பம் வரைக்கும் போய் நிற்கிற மாதிரி பாதிப்பு வந்து விடுகிறது. ஒரு மெலிதான லைன் என்றாலும், அதை இப்போது நடக்கிற சம்பவங்களோடு சேர்ந்து சுவராஸ்யம் கூட்டி உருவாக்கியிருக்கிறார்கள். விஜய் ஆண்டனிக்கு இது முதல் போலீஸ் படம். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேற்ற மாதிரி இயங்குவதே சிரமமானது. இது ஒரு சாமானிய போலீஸ் அதிகாரியின் கதை. இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது. ""திமிரு பிடிச்சவன்' வெறும் ஆக்ஷன் மட்டும் கிடையாது... கோபம், பாசம், அழுகை, வெறி, கெத்து எல்லாம் சேர்த்து மாஸ் படம்'' என்கிறார் இயக்குநர் கணேஷா. விஜய் ஆண்டனிக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ். நிவேதாவும் இதில் போலீஸ். விஜய் ஆண்டனி கூடவே பயணிக்கிற மாதிரி ஓர் இடம். காதல், அன்பு, நேசம், பாசம் எல்லாம் வேலை செய்கிற இடத்தில் கிடைத்தால் எப்படியிருக்கும். அப்படி ஒரு விதமாக கதை இருக்கும்.