பெரம்பலூர், ஆத்தூரை சேர்ந்த இளைஞர் அருள்ஜோதி. இன்ஜினியரிங் படித்துவிட்டு விவசாயத்தின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக காளான் வளர்ப்பில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் இவரைச் சந்தித்தோம்:
""அப்பாவின் ஆசைக்காக, இன்ஜினியரிங் படித்தேன். படிப்பு முடிந்ததும் , ஒரு நிறுவனத்தில், 4 ஆண்டுகள் வேலை பார்த்தேன். ஆனால், எனக்குள் விவசாயம் சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமிருந்து கொண்டே இருந்தது. அந்த சமயத்தில், 15 ஆண்டுகளாக சுயஉதவிக் குழு நடத்தி வரும் எனது அம்மா செல்வி கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
காளானுக்கு தற்போது மக்களிடைய நல்ல வரவேற்பு இருப்பதால் அங்குச் சென்று காளான் வளர்ப்புக் கற்றுக் கொண்டு வந்து கடந்த மூன்று ஆண்டுகளாக காளான் பயிர் செய்து விற்பனை செய்து வருகிறேன்.
தற்போது ஒரே நேரத்தில் 50 கிலோ பிளான்ட் எடுக்கும் அளவிற்கு தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறேன். எங்கள் குடும்பமே என்னுடன் காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். மக்களிடமும் எங்கள் காளானுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
காளான் என்று எடுத்துக் கொண்டால் சிப்பி காளான், பட்டன் காளான், மில்கி காளான் என 3 வகையான காளான்களை நாம் உணவுக்காக பயன்படுத்துகிறோம். சிப்பி காளான் என்பது மழைக்காலங்களில் மட்டுமே விளையக் கூடியது. பட்டன் காளான் என்பது ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் விளையக்கூடியது. மில்கி காளான் தான் சூடான வெப்ப நிலையிலும் வளரக்கூடியது. எங்கள் பகுதி வறண்ட பகுதி என்பதால் நான் மில்கி காளானை தேர்வு செய்து பயிர் செய்து வருகிறேன்.
இந்த காளான் முழுக்க முழுக்க ஆர்கானிக் முறையில் விளைவது. வைக்கோலை பதப்படுத்தி, பின்னர் அதில் காளான் விதைகளை தூவிவிட்டால், 25 நாள்களில் பூஞ்சை காளான்கள் உருவாகும். பின்னர், அதனை பாலிதீன் பையில் அடைத்து, அதற்கு தேவையான இடு பொருள்கள் கொடுத்து, பதினைந்து நாள்கள் தண்ணீர் தெளித்து வந்தால் 15 -ஆவது நாளில் இருந்து காளான் முளைவிட ஆரம்பிக்கும். ஓரளவு நன்கு வளர்ந்ததும் அதனை அறுவடை செய்துவிடலாம். அதன் பின்னர் பேக்கிங் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். ஒரு கிலோ ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்கிறது. அதனால் கணிசமான வருமானமும் கிடைக்கிறது.
அதுபோன்று மற்ற காளான் வகைகளை விட மில்கி காளானைப் பொருத்தவரையில் நார்சத்து அதிகமுள்ளது. கொழுப்பு சத்தும் குறைவாக இருக்கும். இதனால் உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது. மற்ற 2 வகையான காளான்களிலும் கிரேவி , பிரியாணி மட்டும்தான் செய்ய முடியும். ஆனால், மில்கி காளானில் கிரேவி, பிரியாணி மட்டுமில்லாமல் பஜ்ஜி, காளான்- 65 , காளான் சமோசா, காளான் கட்லெட், காளான் தோசை, காளான் சப்பாத்தி போன்றவை செய்யமுடியும். அதனால் இந்தவகை காளான் "இன்டியன் பியூட்டி' என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த மில்கி காளான் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் இதனை நாங்கள் தேர்வு செய்ய ஒரு காரணம்'' என்றார்.