நான்கு பெற்றோர்கள் இணைந்து குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான முழுமையான பொழுதுபோக்கு கூடம் ஒன்றினை "ஓட்டோபியா' என்ற பெயரில் சென்னை அபிராமபுரத்தில் அமைத்துள்ளனர். இந்த பொழுதுபோக்கு கூடம்தான் இந்தியாவிலேயே குழந்தையும், பெற்றோரும் இணைந்து பொழுது போக்கக்கூடிய முதல் பொழுதுபோக்கு கூடமாகும். இது குறித்து பத்ரிநாராயணன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""நானும், ஜெயக்குமார், தீபா விஜய் மற்றும் அனு ஸ்ரீராம் நாங்கள் நால்வரும் நண்பர்களானது எங்களது பிள்ளைகள் மூலம்தான். எங்களது பிள்ளைகள் எல்லாரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அதன்மூலம் நண்பர்கள் ஆனவர்கள். 7-8 ஆண்டுகளாக, தினசரி சந்தித்துக் கொள்வோம். இந்நிலையில் திடீரென நால்வரும் சேர்ந்து ஏதாவது பிசினஸ் தொடங்கலாம் என எண்ணம் வர, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தோன்றியது இந்த ஐடியா, நான் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தேன், ஜெய்குமார் ஜிம் வைத்திருந்தார், தீபா விஜய் வோடபோனில் வேலைப்பார்த்து வந்தார்.
அதில் அனுதான், " குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஏதாவது செய்யலாம்' என்றார். ஏனென்றால், அவர் ஏற்கெனவே குழந்தைகளுக்கான கார்னிவேல், ஃபேர் டிரேட் எல்லாம் செய்திருக்கிறார்கள். அந்த அனுபவத்தைக் கொண்டு தொடங்கலாம்'' என்றார், அந்த சமயம், அவருடைய தந்தை எங்களது பிசினஸýக்காக இந்த இடத்தைக் கொடுத்தார்.
அனைவரும் சேர்ந்து யோசித்ததில், குழந்தைகள் விளையாடுவதற்கான ஓர் இடமாக இது இருக்க வேண்டும். அதே சமயம் குழந்தையை அழைத்து வரும் பெற்றோருக்கும் பயனுள்ள இடமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஏனென்றால் பொதுவாக குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்களில் ஃபன் சிட்டி. அழைத்துச் செல்லும் பெற்றோர் அவர்கள் பொழுது போகாமல் குழந்தைகளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள். சில இடங்களில் குழந்தையைவிட்டு போய்விடவேண்டும். பிறகு மீண்டும் வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.
இதனால் நாங்கள் கொஞ்சம் மாற்றி யோசித்தோம். குழந்தைகளுக்கு விளையாட்டு இடமாக இருந்தாலும், பெற்றோருக்கு பயனுள்ள இடமாகவும் இருக்க, என்னென்ன தேவை என்று யோசித்தோம், இதன் அடிப்படையில், சின்ன நூலகம், மாடியில் ஜிம், ஃபிட்னஸ் ஏரியா, யோகா மையம், அலுவலக வேலை ஏதாவது இருந்தால் லேப்டாப் கொண்டு வந்து வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையாடும் வரை அவர்களது அலுவலக வேலையையும் கவனிக்கலாம். குழந்தைகளுக்கான நாட்டியப்பள்ளி, இசைப் பள்ளி. எனக்கு சினிமா பார்க்க தியேட்டருக்கு போக எல்லாம் நேரமே இல்லை என்று சொல்லுவோருக்காக மினி தியேட்டர். பெற்றோர் 4-5 பேர் ஒன்று சேர்ந்து அமர்ந்து பேசிக் கொள்ள இடம். சின்னதா காபி ஷாப் என உருவாக்கினோம்.
கடந்த நவம்பர் மாதம் தொடங்கினோம். ஆரம்பத்தில் இதற்கு வரவேற்பு இருக்குமா என்ற எண்ணம் இருந்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருக்கும் தெரிய வர, தற்போது நிறையப் பேர் வரத் தொடங்கிவிட்டனர். தற்போது இங்கு பார்த்டே பார்ட்டி போன்ற சின்ன சின்ன பார்ட்டிகளுக்கான இடமாகவும் இது மாறியுள்ளது.
இங்கு வந்த சில பெற்றோர் சொன்னார்கள், "இது போன்ற இடங்களை நாங்கள் சிங்கப்பூரில், துபாயில் பார்த்திருக்கிறோம். சென்னையில் இல்லையே என்று நினைத்தோம்' என்றனர். இப்படி அவர்கள் சொல்லும்போதுதான் நாங்கள் ஏதோ நல்ல விஷயத்தைதான் செய்திருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. வரவேற்பும் நன்றாக இருக்கிறது.
இங்கு பெற்றோருக்கு இரண்டு வகை ஃபன் உண்டு ஒன்று பார்ட்டியில் கலந்து கொள்வது, அதில் பெற்றோருக்கு சில குட்டி குட்டி கேம்கள் பாட்டு, டான்ஸ் என வைத்துள்ளோம். இதனால் அவர்கள் தங்களது ஒர்க் டென்ஷன் எல்லாம் உள்ளே வந்தால் மறந்து போய் நிறைய மகிழ்ச்சியாக செல்ல முடியும்.
எங்கள் குழந்தைகளை ஒரு மாலுக்கோ, ஃபன் சிட்டிக்கோ அழைத்துச் செல்லும்போது என்னென்ன வேண்டும் என்று நாங்கள் நினைத்தோமோ, அதையெல்லாம் இங்கே கொண்டு வந்திருக்கிறோம். குழந்தைகள் செல்போனை மறந்து ஓடி, ஆடி, விளையாடவும், மரம் ஏறுதல், ஊஞ்சல் ஆடுதல், கதை சொல்வது, மலை ஏறுதல், பேலன்ஸ் பீம், மங்கி பார், சின்ன சின்ன அறிவியல் விளையாட்டுகள், மியூசிக் ஜிம், கயிற்றால் பரணில் ஏறி விளையாடுவது என்று கிராமத்து விளையாட்டுகளையும் இங்கே அமைத்திருக்கிறோம். இதன் மூலம் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமும், மன வளர்ச்சியும் அதிகரிக்கும். அதுபோன்று குழந்தைகள் கீழே விழுந்து அடிப்பட்டுவிடுமோ என்ற பயமும் இங்கு கிடையாது. ஏன்னென்றால் குழந்தைகளுக்கான விளையாட்டு ஏரியா பூராவும் தரையில் மெத்தைப்போன்று அமைத்திருக்கிறோம்.
பெரியவர்களுக்காக மொட்டை மாடியில் உடற்பயிற்சி கூடம் வைத்திருக்கிறோம். குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி கூடமும் உண்டு. இதுபோன்று குழந்தைக்கும் - பெற்றோருக்குமான முழுமையான விளையாட்டு கூடமாக தொடங்கப்பட்டிருப்பதுதான் இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்.