மக்கள் பயன்பாட்டுக்கு கணினி வந்த பிறகு, எப்படி மடிக் கணினியாக மாற்றம் கண்டதோ, அதேபோல் ஸ்மார்ட்போனும் தற்போது மடிக்கும் ஸ்மார்ட்போன் ஆகிவிட்டது.
ஆம், உலகின் முதல் மடிக்கும் ஸ்மார்ட்போன் சந்தைக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக கூறும் சாம்சங், எல்ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் இதை உருவாக்கவில்லை.
மாறாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ரோயோலி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் "ஃபிளக்ஸிபாய்' எனும் மடிக்கும் ஸ்மார்ட்போனை உருவாக்கி சந்தைப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
மடிப்பதற்கு முன்பு 7.8 அங்குலமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், மடித்த பின்பு மூன்று திரைகளாக மாறுகிறது. அதாவது முன்பும், பின்பும் இரு திரைகளாகவும், அதற்கு நடுவே உள்ள பகுதி போன் திரையாகிறது.
வீடியோ பிளே ஆகிக் கொண்டிருக்கும்போது, தொலைபேசி அழைப்பு, இ-மெயில் வந்தாலும், வீடியோவுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அதை மூன்றாவது திரையில் வைத்து படித்துவிடலாம். மடித்துவிட்ட ஸ்மார்ட்போனில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் இயக்கும் வசதி இதில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மடி ஸ்மார்ட்போன் உறுதியானது என்று கூறும் "ஃபிளக்ஸிபாய்' நிறுவனம், இதை உறுதி செய்ய சுமார் 2 லட்சம் முறை மடித்து சோதனை நடத்தியுள்ளதாகவும் கூறுகிறது. இதில் செல்ஃபி கேமரா 20 மெகா பிக்ஸலாகவும், பின்புறம் உள்ள கேமரா 16 மெகா பிக்ஸலாகவும் உள்ளது. சீனா சந்தையில் இந்த மடி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 128 ஜி.பி. கொண்ட மடி ஸ்மார்ட்போன் ரூ. 1.15 லட்சத்துக்கும், 256 ஜி.பி. கொண்ட மடி ஸ்மார்ட்போன் ரூ. 1.29 லட்சத்துக்கும் கிடைக்கிறது. இதனை ஆன்லைனில் பதிவு செய்தும் பெறலாம்.
இந்த புதிய தொழில்நுட்பம் எந்தவித பாதிப்புமின்றி, வெற்றி பெற்றால், ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு இந்த மடி ஸ்மார்ட்போன் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் மாற்றமில்லை.