உங்களுக்கு தனுசு லக்னம். மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் 4 ஆம் பாதம். அஷ்டமாதிபதியான சந்திரபகவான் சனிபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். பிறப்பில் சனிபகவானின் தசையில் கர்ப்பச் செல்லு போக இருப்பு 3 வருடங்கள், 10 மாதங்கள், 15 நாள்கள் என்று வருகிறது. லக்னம் மற்றும் நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் (சதய நட்சத்திரம் மூன்றாம் பாதம்) அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புக்தி மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். பாக்கியாதிபதியான சூரியபகவான் பன்னிரண்டாம் வீட்டில் குடும்பாதிபதியின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். தனம், வாக்கு, குடும்பம் மற்றும் தைரிய ஸ்தானாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு ராசியான ரிஷபராசியை அடைகிறார். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) மற்றும் லாபாதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். களத்திர, நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ராகு- கேது பகவான்கள் விருச்சிக, ரிஷப ராசிகளில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே தனுசு, மிதுன ராசிகளை அடைகிறார்கள்.
உங்களுக்கு ஏழாமதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பென்றாலும் அவர் அசுபர் சாரம் பெற்றிருக்கிறார். பொதுவாக, மணவாழ்க்கை சீராக அமைய ஏழாம் வீட்டோனும் ஏழாம் வீடும் சிறப்பாக அமைய வேண்டும் என்பது விதி. ஏழாம் வீட்டில் சனிபகவான் இருப்பதும் பெரிய குறை என்று கூற முடியாது. பெண்களுக்கு எட்டாம் வீட்டை மாங்கல்ய ஸ்தானம் என்று அழைப்பார்கள். உங்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் சுத்தமாக இருந்தாலும் மாங்கல்ய ஸ்தானாதிபதி அசுபர் சாரம் பெற்று இருப்பதும் அவரை எந்த சுபக் கிரகமும் பார்வை செய்யாததும் குறை. மேலும் அயன ஸ்தானத்திலும் அசுபக்கிரகங்கள் இணைந்து அசுபர் சாரம் பெற்றிருப்பதும் குறை. குருபகவானை பர்த்துரு காரகர் (வடமொழியில் பர்த்தா என்றால் கணவர் என்று பொருள்) என்று அழைப்பார்கள். அவரும் மறைவு பெற்று அசுபர் சாரம் ஏறியிருக்கிறார். அதோடு தனுசு லக்னத்திற்கு சுக்கிரபகவானுக்கு ஆதிபத்ய விசேடமும் இல்லை. அவரின் தசையில் முற்பகுதி முடியும் தருவாயில் உங்கள் கணவரை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
மற்றபடி, தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி லாப ஸ்தானத்திற்கு ஆதிபத்யம் பெற்று நடக்கும். இது இன்னும் ஆறு ஆண்டுகள் நடக்கும் இதில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகிவிடும். பத்தாம் வீட்டோன் (புதபகவான்) பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் உத்தியோகத்தில் சிறப்பான நிலையை எட்டிவிடுவீர்கள். அரசாங்க உத்தியோகமும் உறுதியாகக் கிடைக்கும் என்று கூறமுடிகிறது. புத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதோடு அவர் குருபகவானின் சாரத்திலும் அமர்ந்திருக்கிறார். மூன்று திரிகோணாதிபதிகளில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் மட்டுமே முழு சுப பலத்துடன் இருக்கிறார். அதனால் உங்கள் மகன் நல்லபடியாக வாழ்வில் முன்னேறி விடுவார். சிறப்பான விவரங்களையும் எட்டி விடுவார் என்று கூறவேண்டும். உங்கள் கணவரால் கிடைக்காத ஆதரவு மகனால் உங்களுக்குக் கிடைக்கும். செவ்வாய்பகவான் பூமி காரகராவார். அதோடு கடன் வாங்குவது அதை திருப்ப அடைப்பது போன்றவற்றையும் செவ்வாய்பகவானின் பலத்தைக்கொண்டே கூற வேண்டும். அதனால் உங்கள் கணவர் பாதி பணம் கொடுத்து வாங்கிய இடத்தை மீதிப் பணத்தைக் கொடுத்து முடிக்கலாம். கடனை அடைத்து விடுவீர்கள். நீங்கள் வசிக்கும் ஊர் கடற்கரையில் உள்ளது. சந்திரபகவான் நீர்கிரகமாவார். அவரே மாங்கல்ய ஸ்தானாதிபதியுமாகிறார். அதனால் நீங்கள் உங்கள் கணவர் வாழ்ந்த ஊரிலேயே வாழலாம். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அந்த மனையிலேயே வீடு கட்டும் யோகம் உள்ளது. உங்கள் வாழ்க்கைப் போராட்டம் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் முடிந்து மலர்ச்சி உண்டாகத் தொடங்கும்.
உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், லக்னாதிபதியான சனிபகவானும் சுக பாக்கியாதிபதியுமான சுக்கிரபகவானும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான், தனம், வாக்கு, குடும்ப லாபாதிபதியான குருபகவான், தைரிய, தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் ஆகியோர் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான ஏழாம் வீட்டில் இணைந்திருக்கிறார்கள். அவருக்கு மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு ஏற்றது. சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று கல்வியில் தேர்ச்சி அடைவார். மற்றபடி அவருக்கும் உங்களுக்கும் ஒரே நட்சத்திரத்தில் ஒரே ராசி என்பதால் எந்த பாதிப்பும் உண்டாகாது. இதுபோல பல குடும்பங்களில் உள்ளது. அவர்கள் நல்ல முறையில் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள். அவர் பத்தாம் வகுப்பு முடிக்கும்போது கோசாரத்தில் சனிபகவான் லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கத் தொடங்குவார். அந்த காலகட்டத்தில் அவர் விரும்பிய படிப்பு படிக்க வாய்ப்புகள் தேடி வரும். சனிபகவான் லக்னாதிபதியாகி ஐந்தாம் வீட்டில் பாக்கியாதிபதியுடன் இணைந்து இருப்பதாலும் "பாவாத் பாவம்' அதாவது எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீடு அதாவது மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் ஐந்தாமதிபதி, ஆயுள் ஸ்தானாதிபதியான புதபகவான் மற்றும் தன, லாபாதிபதியான குருபகவானுடன் இணைந்து இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. அதீத கவலை எதுவும் வேண்டாம். உங்கள் இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி திங்கள் கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்.