என் மூன்றாம் மகளுக்கு எட்டு வயது நடக்கும்போது மூத்த சகோதரிகள் இருவரும் பழம் நறுக்கும் கத்திக்காகப் போட்டிப்போட்ட போது, ஒருவர் எனக்குத்தான் கத்தி என, மற்றவர்களிடம் பிடிபடாமல் இருக்க வேகமாக திரும்பிய நேரத்தில் இவை ஒன்றுமறியாத மூன்றாவது மகள் எங்கிருந்தோ ஓடி வந்து அங்குசேர, தன் இடது கண்ணில் அந்த கத்திக்குத்தைப் பெற்றுவிட்டார். விழிலென்சு கிழிந்துவிட்டது. கருவிழியும் மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. இடது கண் பார்வை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டு வலது கண்ணினால் பொறியியல் படிப்பை படித்து முடித்து விட்டார்.

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். சுகாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்)

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். சுகாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் ஆகிய மூன்று திரிகோணாதிபதிகளும் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருப்பது மிகவும் சிறப்பாகும். 
பொதுவாக, ஒன்றாம் பாவமான லக்னம் வலுத்திருக்கும் பட்சத்தில் ஜாதகர் நல்ல உடல் வலிமையும் திறமையும் பெற்று இதர பாவங்களின் தன்மைகளுக்கு ஏற்பத் தன்னை இயக்கிக் கொள்வார் என்பது ஜோதிட கருத்து. அவருக்கு மேற்கூறிய வகையில் லக்னம், லக்னாதிபதி வலுத்திருக்கிறார். ஐந்தாம் வீட்டோன் ராசியிலும் அம்சத்திலும் பலம் பெற்று இருப்பதால் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அரசு அந்தஸ்தைப் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். ஒன்பதாம் பாவம் வலுத்தால் ஜாதகரால் தந்தை நலம் ஓங்கவும் சிறப்பான பதவிகளை வகிக்கவும் வாய்ப்புகள் உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் சம்பாதித்த பணத்தை முறைப்படி முதலீடு செய்து வருவாய் ஈடுபடவும் முடியும் என்பது கருத்தாகும். பொதுவாக, 1,5,9 ஆகிய மூன்று திரிகோணங்களில் எது பலமாக உள்ளதோ அதைக் கொண்டு அந்த கோணத்தில் எண்ணத்தைச் செலுத்த வேண்டும். அவருக்கு ஒன்பதாமிடம் சிறப்பான வலுபெற்று இருப்பதால் யோகபாக்கியங்களும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வந்தடையும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டுக்கதிபதியும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பத்தாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லாப ஸ்தானமான தன் மூலத்திரிகோண வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். சர லக்னங்களுக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிகள்) பதினொன்றாம் வீடு பாதக ஸ்தானம் என்று உள்ளது. பாதாகாதிபதி பலம் குறைந்தால் பாதகம் குறையும் என்று கூறுவார்கள். இது அனுபவத்தில் ஒத்துவருவதில்லை. பாதகாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலோ கேந்திர திரிகோண வீடுகளில் இருந்தாலோ அதி உன்னத பலன்களைத் தருகிறார். அதனால் பாதகாதிபதியைப் பற்றி பெரிதாகக் கவலைப் படவேண்டாம் என்பதே எங்களின் கருத்தாகும்.
ராகுபகவான் ஆறாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கேதுபகவான் அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது அஷ்டலட்சுமி யோகமாகும். ஓர் அசுபக் கிரகம் ஆறில் மறைந்தால் யோகம் தருவார் என்பது விதி. புத, சுக்கிர பகவான்களின் சேர்க்கையை அவ்வளவு குறைவாக மதிப்பிடக் கூடாது. அதாவது புதபகவான் ஆறாம் வீட்டோனாகி ஏழாமதிபதியான சுக்கிரபகவானுடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். 3,6,10,11 ஆம் இடங்கள் "உப ஜய ஸ்தானங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. 3,6,10,11 ஆம் வீடுகள் வலுத்திருப்பதால் அவரின் வாழ்வில் நாளுக்கு நாள் வளர்ச்சி கூடிக்கொண்டே போகும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைக் குறிக்கும் நான்காமிடத்தின் அதிபதி சுபக்கிரகமாகி (சந்திரபகவான்) சுபக்கிரகத்தால் (குருபகவான்) பார்க்கப்பட்டு வலுத்திருப்பதால் தன் உறவினர்களாலும் நண்பர்களாலும் போற்றப்படுவார். பொதுவாக, குருசந்திரயோகம் உள்ளவர்கள் தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு அப்பாற்பட்டு வேறொரு புதிய துறையில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள் என்பது அனுபவ உண்மை.
சூரியபகவான் சமுதாயத்தில் மதிப்பு, கம்பீரம், அறிவு, வைராக்கியம், கௌரவம், கண்டிப்பு, பலம், பராக்கிரமம் ஆகியவற்றிற்குக் காரணமாகிறார். மேலும் அவரே முதல்தர அரசுக் கிரகமாகிறார். மற்றவர்களின் பொருள் தன் கைக்கு வருவது என்பது எளிதான காரியமில்லை. இதை ஜன்மாந்திர சுகிர்தம் என்பார்கள். இதற்குக் காரணமான வீடு ஐந்தாம் வீடாகும். இதை விதி வீடு என்றும் கூறுவார்கள்.இந்த ஐந்தாம் வீடு, பலம் பெற்றிருந்தால் குருட்டு அதிர்ஷ்டம் வரும். பஞ்சமாதிபதி சூரியபகவான் தனுசில் குருபகவானோடு இணைந்திருப்பதால் புகழும் பொருளும் தரத்தக்க வகையில் தொழில் அமையும். எல்லா ஆற்றல்களும் உண்டாக்கக் கூடியவர் சூரியபகவானாவார். தைரியத்துடன் பெரிய ப்ராஜட்களை உருவாக்கம் செய்வார். அடிக்கடி தொழில் நிமித்தம் பயணம் செய்ய வைத்துப் பயனும் கிடைக்கச் செய்வார். ஜீவனமும் சுகமாக அமையும். அதோடு வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டுத்தொடர்பில் ஜீவனத்தை அமைத்துக் கொடுப்பார். பெற்றோருக்கும் உயர்நிலை உண்டாகும். பதவி ஏற்றத்திற்கு உத்திரவாதம் உண்டு. உடல்பலத்தால் சாதனை செய்ய முடியும். துணிகள், மூலிகைகள் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணமுடைய பண்டங்கள் ஆகியவற்றில் தொழிலும் ஆதாயமும் கிடைக்கும். அதாவது, பங்கு சந்தை, பண்டக சந்தைகளில் ஈடுபட்டும் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறமுடியும். 
செவ்வாய்பகவான் லக்னாதிபதியாகி வலுத்திருப்பதால் தங்கம், தாமிரம் போன்ற உலோகங்களாலும் எரிபொருள் சம்பந்தப்பட்ட வகையிலும் லாபம் கிடைக்கும். அதனால் அவர் அரசில் உயர்ந்த பதவி வகிக்கவும் கன்சல்டன்ஸி துறைகளில் ஈடுபட்டு உயர்பதவிகளைப் பெறுவார். அரசு விருதுகளும் கிடைக்கும் என்பது உறுதி. சுக்கிரபகவான் மேஷ லக்னத்திற்கு இரண்டு மற்றும் ஏழு ஆகிய இரண்டு மாரக வீடுகளுக்கு அதிபதியாகிறார். அவரின் தசை இளம் வயதில் வந்தது. சுக்கிரபகவானின் தசையில் சுய புக்தியில் இடது கண்ணில் கஷ்டம் ஏற்பட்டது. வாமனராக மஹாபலி சக்கரவர்த்தியைக் காப்பாற்ற முற்படுகையில் சுக்கிரபகவானுக்கு ஒரு கண் பாதிக்கப்பட்டதை அனைவரும் அறிந்ததே. அதனால் பிரதி வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரபகவானையும் பெருமாளையும் மஹாலட்சுமியையும் வழிபட்டு வரச் சொல்லவும். இன்னும் முன்றாண்டுகளுக்குப்பிறகு தொடங்கும் சூரிய தசையிலிருந்து அவரின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும். எதிர்காலம் அவர் எதிர்பார்த்ததிற்கும் மேலாக சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com