உங்களுக்கு மேஷ லக்னம், பூசம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம், கடக ராசி. சுக ஸ்தானாதிபதியான நான்காம் வீட்டுக்கதிபதி சந்திரபகவான் நான்காம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். லக்னத்திற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) ஆட்சி பெற்று வர்கோத்தமத்திலும் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். எவருக்கும் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பாகும். அதுவும் சுபாவ அசுபக் கிரகங்களுக்கு கேந்திராதிபத்யம் அமைந்து கேந்திர ராசிகளில் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. செவ்வாய்பகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் யோகபாக்கியங்கள் கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சொத்துகளும் சேரும். பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு பெயரும் புகழும் பெறமுடியும். சுகானுபவம் கூடும். லக்ன கேந்திரத்தில் செவ்வாய்பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான ருசக யோகம் உண்டாகிறது. பொதுவாக, பஞ்சமஹா புருஷ யோகங்கள் இருந்தால் நல்ல உடல் வாகு உள்ளவராகவும் சகலகலா வல்லவராயும் எவரையும் தன் வசம் கவரும் ஆற்றல் மிக்கவராயும் திகழ்வார். ருசக யோகத்தால் பூமி, கட்டடம், விவசாயம் மூலமாகவும் லாபம் உண்டாகும் என்று கூறலாம். செவ்வாய்பகவான் நான்காம் பார்வையாக சுகஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் பார்வை செய்கிறார். இதனால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, நெருப்பு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் வருமானம் கிடைக்கும். மேலும் செவ்வாய்பகவான் வலுத்தவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சாதனைகள் செய்யும் வலிமை, துணிச்சல், நிர்வாகப் பொறுப்பு ஆகியவைகளைப் பெற்றவர்களாகவும்; அரசு உதவிகளைப் பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.
பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். குருபகவான் லக்ன கேந்திரத்திலும் சந்திரகேந்திரத்திலும் இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுயசாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சமடைகிறார். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் ஆட்சி பெறுகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். கேதுபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
பொருளாதார வளத்தைக் கண்டறிவதற்கு முக்கியமாக இரண்டு மற்றும் ஒன்பதாம் வீடுகளைப் பார்க்க வேண்டும். அதாவது தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் வலுத்திருக்க வேண்டும். இவர்கள் இணைந்தோ அல்லது சமசப்தம பார்வை பெற்றோ, பரிவர்த்தனை (நட்சத்திர பரிவர்த்தனையும் இதில் அடக்கம்) பெற்றிருந்தாலோ, சிறப்பான தனயோகம் உண்டாகும் என்று கூற வேண்டும்.இத்தகையோர் ஒரு காலத்தில் ஏழ்மையை சந்தித்தாலும் வாழ்க்கையின் பிற்பகுதியில் (சராசரியாக நாற்பத்தைந்து வயதுக்கு மேல்) சுபிட்சங்களைப் பெற்றுவிடுகிறார்கள் என்பது அனுபவ உண்மை. இதோடு லாபாதிபதியும் வலுத்திருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலலிருந்து சுபிட்சங்கள் உண்டாகும். உங்களுக்கு இரண்டாம் வீட்டுக்கதிபதி பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருப்பதும் பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தன ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சுகாதிபதியையும் (கஜகேசரி யோகம்) ஆறாம் வீட்டையும் பார்வை செய்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கை தடம் புரண்டு விடாது என்று கூற வேண்டும். மேஷ லக்னத்திற்கு இரண்டு, ஏழாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரபகவான் வலுத்த மாரகர் (கண்டங்களைக் கொடுப்பவர்) என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு ஆரோக்கிய ஸ்தானாதிபதியான புதபகவான் (சுபக்கிரகம்) ஏழாம் வீடான சப்தம கேந்திரத்தில் அசுபக் கிரகமான ராகுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். அவர் அமர்ந்திருப்பது மாரகாதிபதியான சுக்கிர பகவானின் வீடாகும். ஆறாமதிபதிக்கு ஏழாமதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டு அவர் பலகீனப்படுகிறார். புதபகவான் நம் உடலில் நரம்புக்குக் காரகத்துவம் பெறுகிறார். பக்கவாதம் என்பது நரம்பு சம்பந்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
2012 -ஆம் ஆண்டிலிருந்து சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கியது. முதல் பகுதியில் கண்டங்களும் சிரமங்களும் இடையூறுகளும் ஏற்பட்டது. இதனால் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி ராகுபகவானின் புக்தி நடக்கும். சுக்கிர , ராகு பகவான்கள் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து தைரிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானாதிபதியால் பார்க்கப் படுகிறார்கள். சுக்கிரமஹா தசை நடப்பதால் திரவப் பொருள்கள், வெண்மை நிறப் பொருள்கள், உப்பு சம்பந்தப்பப்பட்ட பொருள்களின் மூலம் லாபம் பெறலாம். அதோடு லக்னாதிபதியான செவ்வாய்பகவானுக்கு உகந்த உணவு, நெருப்பு, மளிகை, எண்ணெய் வித்துகள், கட்டுமானம் போன்ற துறைகளிலும் ஈடுபடலாம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் மனதில் தெளிந்த சிந்தனைகள் உருவாகும். சந்திரபகவான் சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் மனோபலமும் சிறப்பாக அமையும். பத்தாமதிபதி கேதுபகவானுடன் இணைந்திருப்பதால் ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், ஆன்மிகம், மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபாடு கூடும். அதோடு கணக்கன் என்கிற புதபகவானும் வலுத்திருப்பதால் ஜோதிடமும் வரும் குருமங்கள யோகம், கஜகேசரி யோகம், புத ஆதித்ய யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அதேநேரம் பத்தாமதிபதி தன் வீட்டிற்கு ஆறில் மறைவு பெறுவதால் செய்தொழிலில் ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி உண்டாகும். மற்றபடி சந்திரபகவானை (உடல் காரகர்) குருபகவான் பார்வை செய்வதால் உடல் நலம் முழுமையாகச் சீரடைந்துவிடும். அதனால் பெரிதாகக் கவலைப்பட எதுவுமில்லை. சுக்கிர தசை சனி புத்தியில் சொந்தவீடு கட்டும் யோகம் உண்டாகும். பிரதி தினமும் முருகப்பெருமானை மனதில் நினைத்துக் கொண்டு ""முருகா முருகா'' என்று ஜபித்து வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.