ஹூண்டாய் இந்தியா நிறுவனம், க்ளாட் மற்றும் பேட்டரி கேபிள் பழுதால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிற 7,000க்கும் மேற்பட்ட இயான் கார்களை ரீகால் (திரும்ப அழைப்பு) செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் நுழைவு நிலை ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்த இயானில், க்ளாட்ச் கேபிளில் ஏற்படும் பழுதால் பேட்டரி கேபிளும் பழுதாவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 1, 2015 லிருந்து ஜனவரி 31, 2015 ஆகிய தேதிகளுக்கிடையே தயாரிக்கப்பட்ட 7,657 கார்களில் இந்த பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டிருக்கிறது.
எனவே இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் அனைத்தையும் திரும்ப பெற ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்த திரும்ப அழைப்பு திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட 7,657 கார்களின் வாடிக்கையாளர்களை கண்டறிந்து அந்தந்த பகுதி டீலர்களே நேரடியாக தொடர்புகொள்வார்கள்.
அப்போது குறிப்பிடப்படும் காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்லும்போது க்ளட்ச் மற்றும் பேட்டரி கேபிள் பழுது குறித்து ஆராயப்படும். பழுது இருக்கும் பட்சத்தில் இலவசமாக அவை இரண்டும் மாற்றித் தரப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.