ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற மார்ச் மாதத்தில் 12% அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அசோக் லேலண்ட் நிறுவனம் மார்ச் மாதத்தில் 18,682 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 16,702 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீத வளர்ச்சியாகும்.
கனரக மற்றும் நடுத்தர வகை வர்த்தக வாகனங்களின் விற்பனை 13,240 என்ற எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதம் அதிகரித்து 15,258-ஆக இருந்தது. அதேசமயம், இலகு ரக வாகன விற்பனை 1 சதவீதம் சரிந்து 3,424-ஆக காணப்பட்டது.
கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2016-17 நிதி ஆண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 1,45,066 வாகனங்களை விற்பனை செய்தது.
2015-16 நிதி ஆண்டு விற்பனையான 1,40,457 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் அதிகமாகும்.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனை 1,09,762-லிருந்து 3 சதவீதம் அதிகரித்து 1,13,296-ஆக இருந்தது.
இலகு ரக வாகன 4 சதவீதம் உயர்ந்து 31,770-ஆக காணப்பட்டது.
விற்பனை குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான வினோத் தாசரி கூறியதாவது:
பல்வேறு கடினமான சவால்களுக்கிடையிலும் கடந்த நிதி ஆண்டில் வாகன விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
பி.எஸ்-III வாகனங்கள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை எதிர்பாராதது. இதனால், மோட்டார் வாகனத் துறைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த முடிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.